தாப்பா, ஜூன்.03-
சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொண்டதைப் போல் இரு கார்கள் மோதிக் கொண்டு, கரணம் அடித்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், சுங்கையிலிருந்து பீடோருக்குச் செல்லும் வழியில் நேற்று திங்கட்கிழமை 11.45 மணியளவில் இரு கார்கள் மோதிக் கொண்ட சம்பவத்தை தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் ஜோஹாரி யாஹ்யா உறுதிச் செய்தார்.
அந்த நெடுஞ்சாலையின் 349.9 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் இரு வாகனமோட்டிகளான 23 வயது பெண்ணும், 42 வயது ஆணும், சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.
பெரோடுவா பேஸா ரகக் காரைச் செலுத்திய பெண், வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், நெடுஞ்சாலையின் இடது புறத்தில் சென்று கொண்டிருந்த டொயோட்டா வியோஸ் காரின் பின்புறம் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.