அயோப் கானுக்கு டான்ஸ்ரீ விருது வழங்கப்பட்டது அசாதரணமான சமிக்ஞையாகும்

கோலாலம்பூர், ஜூன்.03-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் பிறந்த தினத்தை முன்னிட்டு போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சைக்கு டான்ஸ்ரீ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது அசாதரணமான சமிக்ஞையாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

அரச மலேசியப் போலீஸ் படையின் வரலாற்றில் துணை ஐஜிபிக்கு, டான்ஸ்ரீ விருது வழங்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். போலீஸ் படையில் வழக்கமாக அதன் தலைவருக்கு மட்டுமே டான்ஸ்ரீ விருது வழங்கப்படும்.

துணைத் தலைவருக்கு அந்த உயரிய விருது வழங்கப்பட்டதில்லை. ஆனால், போலீஸ் படையில் மக்களின் கவன ஈர்ப்புக்கு உரியவரான அயோப் கானுக்கு டான்ஸ்ரீ விருது வழங்கப்படுவது என்பது மாமன்னரின் பிரத்தியேக உரிமைக்கு உட்பட்டதாகும்.

அயோப் கான் நாட்டின் தேசிய பாதுகாப்புத் துறைக்குப் புதியவர் அல்ல. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக போலீஸ் படையில் தனது திறனை நிரூபித்து வரும் ஓர் முக்கிய அதிகாரியாவார். நேர்மை, துணிச்சல், விவேகம் என்ற நெறிகளின் மூலம் அயோப் கான் பலரின் கவன ஈர்ப்புக்குரிய ஒரு காவலராகப் பார்க்கப்படுகிறார்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிறப்பு இலாகாவான பயங்கரவாத எதிர்ப்பு பிரிவான E8 க்கு அவர் தலைமையேற்றிருந்த போது, பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கும் ஓர் உயர் போலீஸ் அதிகாரியாக முதல் முறையாக அயோப் கான் பார்க்கப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS