கோலாலம்பூர், ஜூன்.03-
பிகேஆர் கட்சியின் நியமனத் துணைத் தலைவர் பதவி ஒன்றை உருவாக்குவது குறித்த கட்சியின் தலைமைத்துவம் இன்னும் விவாதிக்கவில்லை என்று அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் கமீல் அப்துல் முனிம் தெரிவித்துள்ளார்.
நியமனத் துணைத் தலைவர் பதவி ஒன்றை உருவாக்குவது குறித்து கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூருல் இஸா பரிந்துரை செய்து இருப்பதாக முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி கூறியிருப்பது தொடர்பில் கமீல் அப்துல் முனிம் எதிர்வினையாற்றினார்.
தம்மைப் பொறுத்தவரை, நியமனத் துணைத் தலைவர் பதவி ஒன்றை உருவாக்குவது தொடர்பான விவகாரம் தமக்குத் தெரியாது என்றார் அவர்.
ரஃபிஸி ரம்லி, ஆற்றலில் மிகையானவர். அந்த பாண்டான் எம்.பி. தொடர்ந்து கட்சிக்குத் தனது ஆதரவை வழங்கி, வலுப்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளத் தவறியிருக்கும் ரஃபிஸி ரம்லி, நியமனத் துணைத் தலைவராக அமர்த்தப்பட வேண்டும் என்று நூருல் இஸா பரிந்துரைத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.