கோலாலம்பூர், ஜூன்.03-
சுற்றுப் பயணிகள் போர்வையில் நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்ததாக நம்பப்படும் அந்நிய நாட்டைச் சேர்ந்த 279 பேர், விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கேஎல்ஐஏவில் நேற்று தரையிறங்கிய அந்த 279 பேர், குடிநுழைவு முகப்பிடங்களைக் கடந்து செல்வதில் தயக்கம் காட்டிய நிலையில், விமான நிலையத்திற்குள் சுற்றித் திரிந்து கொண்டு இருந்த போது அவர்களின் நடமாட்டம், ரகசிய கேமராவில் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்பகுதிக்கு விரைந்த எல்லைக் கட்டுப்பாட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள், வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அந்த அந்நிய நாட்டவர்களின் பயண ஆவணங்களைச் சோதனையிட்ட போது, அவர்கள் உண்மையிலேயே சுற்றுப் பயணிகள் அல்ல என்பது தெரிய வந்தது.
அவர்கள் நாட்டுக்குள் நுழைவது தடுக்கப்பட்டு, அவர்களின் தாயகத்திற்குத் திரும்பிச் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எல்லைக் கட்டுப்பாட்டு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.