மேத்தாவைச் சாடினார் அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல்

கோலாலம்பூர், ஜூன்.03-

சமூக வலைத்தளங்களில் சைபர் பகடி வதை, மோசடி, ஆபத்தான உள்ளடக்கங்கள் தொடர்பிலான விவகாரத்தைக் கையாளுவதில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்து மிகப் பெரிய சமூக வலைத்தள நிறுவனங்களான மேத்தா மற்றும் எக்ஸ் ஆகியவற்றைத் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் இன்று சாடினார்.

டிக் டாக் மட்டுமே உண்மையிலேயே தனது பங்களிப்பையும், ஈடுபாட்டையும் வழங்கி வருகிறது என்பதுடன் தொடர்பு மற்றும் பல்லூடக உள்ளடக்கங்கள் மீதான ஆய்வரங்கிலும் தன்னார்வ அடிப்படையில் பங்கேற்றுள்ளது என்று டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

எனினும் சமூக வலைத்தளங்களில் தற்கொலை போன்ற அபாயகர உள்ளடக்க விவகாரங்களை அவற்றின் போக்குகளிலேயே அப்படியே விட்டு விட முடியாது, கைக்கழுவி விடவும் முடியாது. உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று டத்தோ பாஃமி வலியுறுத்தினார்.

இன்று நடைபெற்ற தற்கொலை உள்ளடக்கங்கள் மீதான தொடர்த்துறை மற்றும் பல்லூடக ஆய்வரங்கில் கலந்து கொண்டு பேசுகையில் டத்தோ பாஃமி இதனைக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS