ஷா ஆலாம், ஜூன்.03
அம்னோவில் இருந்து விலகியுள்ள வர்த்தகம், முதலீடு மற்றும் தொலில் துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ், சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக நியமிக்கப்படலாம் என்று ஆருடங்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் தாம் வகித்து வரும் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியைக் காலி செய்யும்படி சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரான அமிருடின் ஷாரி, பத்துகேவ்ஸிற்கு உட்பட்ட சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இடைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து, தெங்கு ஸாஃப்ருலை சிலாங்கூர் மந்திரி பெசாராகக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரான அமிருடின் ஷாரி, விரைவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
இதனிடைய தாம் வகித்து வரும் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியைக் காலி செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை அமிருடின் ஷாரி மறுத்துள்ளார்.