மலாக்கா, ஜூன்.03-
தனது காதலியின் மகளை மானபங்கம் புரிந்த குற்றத்திற்காக ஓர் இந்தியப் பிரஜைக்கு மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் மூன்று பிரம்படித் தண்டனை விதிக்க தீர்ப்பளித்தது.
30 வயது S. சக்திவேல் என்ற அந்த இந்தியப் பிரஜை, குற்றச்சாட்டை மறுத்து வந்த நிலையில், இன்று தனது வாக்குமூலத்தை மாற்றி, குற்றத்தை ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி ரோஹாதூல் அக்மார் அப்துல்லா தீர்ப்பளித்தார்.
சக்திவேல், கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் மலாக்கா, தாமான் கெனாங்கா செக்ஷன் 3றில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் தனது காதலியின் 11 வயது மகளிடம் பாலியல் சேட்டை புரிந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்திவேல், அவரின் காதலி மற்றும் அந்தப் பெண்ணின் மூன்று பிள்ளைகள் மலாக்கா கிளேபாங்கில் கடற்கரையைச் சுற்றிப் பார்த்து விட்டு வீடு திரும்பிய போது, அன்றிரவு வீட்டில் தங்கிய வேளையில் காதலியின் 11 வயது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.