இந்தியப் பெண்கள் வர்த்தகத்தில் சாதிக்க பெண் 2.0 திட்டம் பெரும் துணையாக இருக்கும்

கோலாலம்பூர், ஜூன்.03-

தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணனால் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்ட பெண் 2.0 திட்டமானது, வர்த்தகத்தில் சாதிக்கத் துடிக்கும் இந்தியப் பெண்களுக்குப் பெரும் துணையாக இருக்கும் என்று மைக்கியின் பெண் தொழில் முனைவர்களுக்கானப் பொறுப்பாளரான ஹேமலா சிவம் தெரிவித்தார்.

50 மில்லியன் ரிங்கிட் நிதியுடன்அமானா இக்தியாரின் பெண் திட்டத்தைக் கடந்தாண்டு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் அறிவித்தார்.

இதுவொரு கடன் திட்டம் என ஆரம்பத்தில் பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இந்தியப் பெண்கள் மத்தியில் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இலக்கிடப்பட்ட காலத்திற்குள் அந்நிதி இந்தியப் பெண் வர்த்தகர்களைச் சென்றடைந்தது. கிட்டத்தட்ட 6,247 பெண் வர்த்தகர்களுக்கு 42.7 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டதாக ஹேமலா Hemala குறிப்பிட்டார்.

இத்திட்டம் பெண் வர்த்தகர்களுக்கு பெரும் பயனையளித்ததை தொடர்ந்து டத்தோஶ்ரீ ரமணன் இம்முறை பெண் 2.0 திட்டத்தை அறிவித்துள்ளார். குறிப்பாக , இவ்வாண்டு 100 மில்லியன் ரிங்கிட் இந்தப் பெண் திட்டத்திற்காக ஒதுக்கப்படுகிறது என்று அவர் அறிவித்துள்ளார் என்று ஹேமலா கூறினார்.

இந்தியப் பெண்கள் வர்த்தகத்தில் தங்களை மேம்படுத்திக் கொள்ள இதுவொரு சிறந்த வாய்ப்பாகும். அதே வேளையில் புதியதாக வர்த்தகத்தைத் தொடங்க விரும்பும் இந்தியப் பெண்களுக்கும் இதுவொரு பொன்னான வாய்ப்பாகும்.

பெண் 2.0 திட்டம் குறித்து முழு விவரம் பெற இந்தியப் பெண்கள் அருகில் உள்ள அமானா இக்தியார் அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லலாம் என்று தொழில் முனைவருமான ஹேமலா கூறினார்.

WATCH OUR LATEST NEWS