கோலாலம்பூர், ஜூன்.03-
பிகேஆர் கட்சியின் இரண்டாவது உதவித் தலைவர் என்ற முறையில் தமக்கு முழு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று சில தரப்பினர் வலியுறுத்தி வரும் வேளையில் இவ்விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நெருக்குதல் அளிக்க வேண்டாம் என்று டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கேட்டுக் கொண்டார்.
தம்மைப் பொருத்த வரையில் பிரதமர் முடிவு எடுப்பதற்கு இடம் அளிக்க வேண்டும். நெருக்குதல் அளிக்கக்கூடாது என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
இன்று பண்டார் ஶ்ரீ டாமான்சாராவில் உள்ள அமானா இக்தியார் மலேசியா தலைமையகத்தில் பெண் 2.0 திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சரான டத்தோஸ்ரீ ரமணன் மேற்கண்டவாறு கூறினார்.
பிகேஆர் தேர்தலில் அமைச்சர்கள் உட்பட முக்கியப் பிரமுகர்கள் தோல்விக் கண்ட நிலையில் கட்சியின் மூன்றாவது முக்கியப் பொறுப்பான உதவித் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள டத்தோஸ்ரீ ரமணனுக்கு முழு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.