அன்வாருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு செல்லாதா? துன் மகாதீரின் வாதத்தை மறுத்தது சட்டத்துறை அலுவலகம்

கோலாலம்பூர், ஜூன்.03-

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு முழு அரச மன்னிப்பு வழங்கப்பட்ட செயல்முறை, செல்லத்தக்கதா? என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் கூற்றை, சட்டத்துறை அலுவலகம் மறுத்துள்ளது.

அன்வாருக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டது, கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்டதாகும் என்று சட்டத்துறை அலுவலகம் தெளிவுபடுத்தியது.

கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டரசு பிரதேசத்திற்கான 51 ஆவது மன்னிப்பு வாரியக் கூட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் முகமட் V தலைமையில் நடைபெற்றது.

அப்போது பிரதமராக இருந்த துன் மகாதீரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்று சட்டத்துறை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அன்று நடைபெற்ற மன்னிப்பு வாரியக் கூட்டத்தில், மன்னிப்பு கேட்டு அன்வார் செய்து கொண்ட மேல்முறையீட்டை ஏற்று, அவருக்கு முழு மன்னிப்பு வழங்குமாறு மாமன்னருக்கு மன்னிப்பு வாரியம் அறிவுறுத்தியது.

மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையின் பேரில், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு முழு மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர் உடனடியாக விடுவிப்பதற்கான ஒப்புதலை மாமன்னர் வழங்கினார் என்று சட்டத்துறை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

மன்னிப்பு வாரியக் கூட்டம் நடத்த வேண்டிய முறைப்படி நடக்காததால் அன்வாருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு செல்லாது என்று வாதிட்டு வரும் துன் மகாதீரின் கூற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக சட்டத்துறை அலுவலகம் அறிக்கையை வெளியிட்டது.

பொதுத் தேர்தல் முடிவுற்ற நிலையில், இடைநீக்கத்தில் இருந்த சட்டத்துறை தலைவர் அபாண்டி அலியின் ஆலோசனையின்றியும், மன்னிப்பு வாரியக் கூட்டம் நடைபெறாத நிலையிலும், அன்வாரின் பொது மன்னிப்பு பரிந்துரைக்குத் தாம் கையெழுத்திட்டு விட்டதாக துன் மகாதீர் கூறியுள்ளார்.

சட்டத்துறை தலைவர் இல்லாத நிலையில் மேற்கொள்ளப்பட்ட அன்வாருக்கான மன்னிப்பு, எவ்வாறு செல்லுப்படியாகும் என்று அண்மையில் டிக் டாக் காணொளியில் துன் மகாதீர் கேள்வி எழுப்பியிருந்தார்.

எனினும் துன் மகாதீரின் இந்தச் செயலானது, மன்னிப்பு வாரியத்தின் முடிவு தொடர்பில் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடிய பொருத்தமற்ற செயலாகும் என்று அந்த முன்னாள் பிரதமருக்கு சட்டத்துறை அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS