கோலாலம்பூர், ஜூன்.04-
தமக்கும், தம்முடைய குடும்பத்தினருக்கும் சொந்தமான 750 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பரச் சொத்துக்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்வதற்கு அனுமதி அளித்துள்ள கோலாலம்பூர் உயர் நீதிமன்ற முடிவை எதிர்த்து முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற டாயிம் ஸைனுடினின் துணைவியார் நாயிமா அப்துல் காலிட் தனது சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
தாங்கள் கொண்டுள்ள இந்த சொத்துக்கள் யாவும் சட்டப்பூர்வமாகச் சம்பாதிக்கப்பட்டவை என்றும், எக்காரணத்தைக் கொண்டும் அவற்றை விட்டுக் கொடுக்கத் தாம் தயாராக இல்லை என்றும், நாயிமா சூளுரைத்துள்ளார். தங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது ஓர் அத்துமீறியச் செயலாகும். உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக நாயிமா தெரிவித்துள்ளார்.
நாயிமா மற்றும் அவரின் குடும்பத்திற்குச் சொந்தமான லண்டனில் உள்ள 3 ஆடம்பர பங்களா வீடுகள், இரண்டு வர்ததகக் கட்டிடங்கள் ஆகியவை எஸ்பிஆர்எம்மினால் முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்கும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.