புத்ராஜெயா, ஜூன்.04-
அனைத்து எல்ஆர்டி ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு கதவைப் பொருத்தும்படி பிரசாரானா நிறுவனத்திற்குப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று மாலையில் பூசாட் பண்டார் பூச்சோங் எல்ஆர்டி ரயில் நிலையத்தில் தைவான் பிரஜை ஒருவர், ரயிலினால் மோதப்பட்டு உயிரிழந்தது போன்று விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நிகழ்ந்து விடாமல் இருக்க பாதுகாப்புக் கதவுகள் அவசியமாகின்றன என்று பிரசாரானா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இவ்விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து அமைச்சர் அந்தோணி லோக்கிடம் கேட்ட போது, இச்சம்பவம் குறித்து புலன் விசாரணை செய்யும் பொறுப்பு போலீசாரிடம் விட்டு விடுவதாக குறிப்பிட்டார்.
எனினும், எல்ஆர்டி ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவில் அந்த சம்பவம் பதிவாகியிருக்கிறது. இதனை விபத்தென்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாலை 6 மணிக்கு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் எச்ஆர்டி ரயில் இருப்புப் பாதையில் தவறி விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த தைவான் பிரஜை, ரயிலில் அரைப்பட்டு உயிரிழந்ததாக பத்திரிகைத் தகவல்கள் கூறுகின்றன.