கோலாலம்பூர், ஜூன்.06-
பாலஸ்தீன மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஆதரித்து, அவர்களின் உரிமைகள் மற்றும் சுயமரியாதையைக் காப்பதில் துருக்கியுடன் இணைந்து, உறுதியாக நிற்பதற்கு மலேசியா உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்ற டத்தோஸ்ரீ அன்வார், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் குரல்களைப் பாதுகாப்பதில் துருக்கி அதிபரின் உறுதியான நிலைப்பாட்டிற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
காஸா மக்களின் துன்பங்கள் குறித்து உலகம் இன்னமும் வாய் மூடி மெளனியாக இருந்து விட முடியாது. பாலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் சுயமரியாதையைப் பாதுகாக்கக் கிடைக்கக் கூடிய அனைத்து வழிகளையும், திறன்களையும் பயன்படுத்துவதற்கான அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் நிலைப்பாட்டை மலேசியா நிச்சயமாக வரவேற்கிறது, முழுமையாக ஆதரிக்கிறது என்று அன்வார் கூறினார்.