இன்ஸ்பெக்டருக்கு மரணத் தண்டனை உறுதிச் செய்யப்பட்டது

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.06-

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தனது காதலியைக் கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் போலீஸ் புலன் விசாரணை அதிகாரிக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை அப்பீல் நீதிமன்றம் உறுதிச் செய்தது.

தனது காதலியான 27 வயது கார்த்தினி பொர்ஹான் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் போலீஸ் இஸ்பெக்டரான அஹ்மாட் ரிஸால் உமார் என்பவருக்கு உயர் நீதிமன்றம் விதித்த மரணத் தண்டனையை நீதிபதி சுபாங் லியான் தலைமையிலான மூவர் அடங்கிய அப்பீல் நீதிமன்ற நீதிபதி குழுவினர் நிலை நிறுத்தியுள்ளனர்.

இந்தத் தீர்ப்பானது, சட்டத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியம் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட தெளிவான செய்தியாகும் என்ற தீர்ப்பின் உள்ளடக்கம் குறித்து எழுத்துப்பூர்வமான தீர்ப்பை வழங்கிய வழக்கைச் செவிடுத்த நீதிபதிகளில் ஒருவரான வோங் கியான் கியோங் தெரிவித்தார்.

போலீஸ் அதிகாரிகள் அனைவரும் 1967 ஆம் ஆண்டு போலீஸ் சட்டத்தின் 13 ஆவது விதியின் கீழ் சத்தியப் பிரமாண செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வழக்கில் மேல்முறையீடு செய்துள்ள முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஒரு கொலையைப் புரிந்ததன் மூலம் அந்தச் சட்டத்தை மீறியுள்ளார். எனவே அந்தச் சட்டத்தை அவருக்கு நிலை நாட்ட வேண்டிய அவசியம் நீதிமன்றத்திற்கு இருப்பதாக நீதிபதி வோங் கியான் கியோங் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி அதிகாலையில் சபா, கெனிஙாவ், தாமான் அண்டிகா என்ற ஓர் அடுக்குமாடி வீட்டில் தனது காதலியைக் கொலை செய்ததற்காக அவருக்கு கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்தது. அத்தண்டனையை எதிர்த்து அவர் அப்பீல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

WATCH OUR LATEST NEWS