சிங்கப்பூர், ஜூன்.06-
சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தமது தண்டனையை நிறைவேற்றினார். இனி அவர் சிங்கப்பூர் சிறைச் சேவையின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஈஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட வீட்டுக் காவல் திட்டம் நிறைவடைந்தது என்று சிங்கப்பூர் சிறைச் சேவை இலாகா ஓர் அறிக்கை வழி தெரிவித்துள்ளது.
ஈஸ்வரன் அரசாங்கச் சேவையில், ஓர் அமைச்சராக இருந்த போது, விலை மதிப்புள்ள பொருள்களை அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்டது, விசாரணைக்கு இடையூறு விளைவித்தது என ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி சிங்கப்பூர் நீதிமன்றம் ஈஸ்வரனுக்கு 12 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.
சிங்கப்பூர் வரலாற்றில் ஓர் அமைச்சருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து ஈஸ்வரன் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஈஸ்வரன், 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் வீட்டுக் காவல் திட்டத்திற்கு மாற்றப்பட்டார்.