கோலாலம்பூர், ஜூன்.06-
மனித வள அமைச்சின் இந்தியர்கள் திறன் மேம்பாட்டு முன்னெடுப்பான MISI- (மிஸி) ஏற்பாட்டில் உறைந்த உணவு உற்பத்தி, உணவு பதப்படுத்தும் நுட்பங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான உணவு பாதுகாப்பு பேக்கேஜிங் பட்டறை என்று இரு வகையான பயிற்சிகள் வெற்றிகரமாக நடைபெற்று, நேற்று நிறைவு பெற்றன.
கோலாலம்பூர், கொம்ப்ளெக்ஸ் புடுவில் உள்ள இம்பெரியம் அனைத்துலக கல்லூரியில் 5 நாள் நடைபெற்ற மிஸியின் இந்த இரண்டு பயிற்சித் திட்டங்களிலும் 75 பேர் பங்கு கொண்டு பலன் பெற்றனர்.
இரு பயிற்சி திட்டங்களும் 16 முதல் அனைத்து வயதினருக்கும் திறந்து விடப்பட்டது. இது ஒரு குறுகிய காலப் பயிற்சி என்றாலும் உணவின் உகந்த தரத்தை உறுதிச் செய்வதற்கு தேவையான நுட்ப முறைகளை அறிந்து கொள்ளக்கூடிய பயனுள்ள பட்டறையாக அமைந்தது என்று மிஸியின் இந்த இரு பயிற்சிகளில் கலந்து கொண்ட சிலர், தங்கள் எண்ண அலைகளைத் திசைகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
16 வயது எலிசியா விவரிக்கையில், உணவுகள் பதப்படுத்தும் நுட்பங்களை அறிந்து கொள்வதற்கு இந்த பயிற்சி தமக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றார்.

கேட்டரிங் போன்ற துறைகளில் தாங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், முன்கூட்டியே உணவைப் பதப்படுத்தி, நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அவற்றைத் தயார்படுத்தி, எவ்வாறு உடனுக்கு உடன் பரிமாற முடியும் என்ற நுட்பத்தை மிஸியின் இந்த பயிற்சித் திட்டம் தமக்கு பெரும் வழிகாட்டலாக அமைந்தது என்றார் ருபனேஷ்வரன்.

16 வயது முதல் அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய இந்த பயிற்சியின் மூலம் நமது பாரம்பரிய உணவு வகைகளை உறைய வைத்தல் மற்றும் பதப்படுத்தல் முதலிய நுட்பங்களை அறிவதற்கு தங்களுக்கு மிஸி ஓர் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததாக திலகம் தெரிவித்தார்.

நிபுணத்துடன் உணவை எவ்வாறு முறையாகச் சமைப்பது, சூட்டின் தன்மை எவ்வாறு இருக்க வேண்டும் போன்ற உணவு பதப்படுத்தும் நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கு இது ஓர் அற்புதமான பயிற்சிப் பட்டறையாகும் என்றார் முனியாண்டி.

மிஸியின் ஒருங்கிணைப்புத் தலைவர் கண்மணி லெட்சுமணன் மேற்பார்வையில் நடைபெற்ற இவ்விரு பயிற்சிகளிலும் பங்கேற்றவர்களுக்கு மனித வள அமைச்சின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி டிக்காம் லூர்ட்ஸ் தலைமையிலான பொறுப்பாளர்கள் நற்சான்றிதழ் வழங்கி கெளரவித்தனர்.