ஈப்போ, ஜூன்.08-
பேரா, மாலிம் நாவார் – கோத்தா பாரு சாலையில் நாய் குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று காலை 7.35 மணியளவில் நடந்தது.
மாலின் நவார் பெருமாஹான் அவாம் 2-ஐச் சேர்ந்த 42 வயதான முகமட் சஃபாரில் முகமட் அனுவார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காம்பார் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் முகமட் நஸ்ரி டாவுட் தெரிவித்தார். மோட்டார் சைக்கிள், திடீரென குறுக்கிட்ட நாயின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் எந்த வாகனமும் சம்பந்தப்படவில்லை என்றும், குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.