ஈப்போ, ஜூன்.09-
உப்சி எனப்படும் தஞ்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 14 மாணவர்கள் உட்பட 15 பேர் பேருந்து விபத்தில் பலியான சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.
அதிகமானோரைப் பலி கொண்ட இந்தக் கோர விபத்து, மனிதத் தவற்றினால் நிகழ்ந்ததா? அல்லது வாகனத்தின் தொழில்நுட்பக் கோளாறா? என்பது தொடர்பில் முழு கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்படும் என்று டத்தோ நூர் ஹிசாம் குறிப்பிட்டார்.
உப்சி பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான அந்தப் பேருந்து, அதிவேகமாகச் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதனை யாரும் பார்க்கவில்லை. எனவே இதனை வெறும் ஆருடமாகவே வகைப்படுத்துவதாக டத்தோ நூர் ஹிசாம் தெரிவித்தார்.
இத்துயரசம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.10 மணியளவில் கிழக்கு, மேற்கு நெடுஞ்சாலையில் கெரிக், பானுன் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
அல்ஸா, எம்பிவி வாகனத்துடன் மோதி, அந்த பேருந்து கவிழ்ந்ததில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த 14 மாணவர்களும், பேருந்தைச் செலுத்திய அதன் ஓட்டுநரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.