கோலாலம்பூர், ஜூன்.10-
பாலியல் வன்கொடுமை தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக அவரின் முன்னாள் ஆய்வியல் உதவியாளர் யூசோப் ராவுத்தர் தொடுத்துள்ள சிவில் வழக்கைத் தற்காலிமாக நிறுத்தி வைக்க புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் வரும் ஜுன் 16 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெறவிருந்த ராவுத்தரின் சிவில் வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் அன்வாரினால் தாம் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக ராவுத்தர் தொடுத்த சிவில் வழக்கை உயர் நீதிமன்றம் ,ஏன் ஒத்திவைக்க வேண்டும் என்று அன்வாரின் வழக்கறிஞர்கள் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவினர் அனுமதி அளித்தனர்.
இதன் மீதான முழு விசாரணை வரும் ஜுலை 21 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் குழுவினருக்குத் தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி சுபாங் லியான் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் விசாரணையை ஒத்தி வைப்பதற்கு 1964 ஆம் ஆண்டு நீதிமன்ற சட்டத்தின் 44 ஆவது விதியைப் பயன்படுத்துவதற்குத் தங்களுக்கு முழு அதிகாரம் இருப்பதாக நீதிபதி சுபாங் லியான் குறிப்பிட்டார்.
இது போன்ற சிவில் வழக்குகள், பிரதமர் பொறுப்பில் இருக்கும் பொதுச் சேவையைத் துறையைச் சேர்ந்தவர்களை அவர்களின் பணிக்கு இடையூறாக இருக்கும் என்பதை நீதிமன்றம் ஆமோதிப்பதாக அவர் தெரிவித்தார்.
எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராவுத்தரின் வழக்கறிஞர் ரஃபிக் ரஷிட் அலியின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய ஒருவருக்கு எதிராக சிவில் வழக்கு தொடுக்கும் பட்சத்தில், அவருக்கு இருக்கக்கூடிய சட்டப் பாதுகாப்பு தொடர்பில் அரசியலமைப்புச் சட்டத்தை ஒட்டிய 8 கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் விடை காணும் வரையில் ராவுத்தர் தொடுத்த சிவில் வழக்கு ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று அன்வார் செய்து கொண்ட விண்ணப்பத்தைக் கடந்த ஜுன் 4 ஆம் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ் மாவார் ரொஸாயின் நிராகரித்தார்.
இந்த சிவில் வழக்கை ஒத்தி வைப்பதற்குக் காரணமே இல்லை என்று கூறிய அவர், வழக்கு செலவுத் தொகையாக ராவுத்தருக்கு 20 ஆயிரம் ரிங்கிட்டை வழங்கும்படி அன்வாருக்கு உத்தரவிட்டார்.
இத்தீர்ப்பை எதிர்த்து, அன்வார் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு அப்பீல் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.