சிங்கப்பூர், ஜூன்.10-
சிங்கப்பூர்ப் பூமலையை ஒட்டி ஹோலண்ட் சாலையில் அமைந்துள்ள, ஜோகூர் அரச குடும்பத்துக்குச் சொந்தமான 13 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலப் பகுதியை சிங்கப்பூர் அரசாங்கம் கையகப்படுத்தவிருக்கிறது.
சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும், ஜோகூர் இடைக்கால சுல்தான் துவாங்கு மாஹ்கோத்தா இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமிற்கும்
இடையிலான நிலப் பரிமாற்ற ஒப்பந்தம் இதைச் சாத்தியமாக்கியுள்ளது.
அந்த நிலப் பகுதிக்கு மாற்றாக அதற்கு அருகிலுள்ள 8.5 ஹெக்டர் சிங்கப்பூர் அரசாங்க நிலப்பகுதி, ஜோகூர் ஆட்சியாளருக்கு வழங்கப்படும்.
சிங்கப்பூர் கட்டுப்பாட்டு ஆணையங்களின் ஒப்புதலுக்குப் பிறகு அந்த நிலப்பரப்பில் ஜோகூர் ஆட்சியாளர் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள இயலும்.
நிலப் பரிமாற்றம் இந்த ஆண்டுப் பிற்பகுதியில் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஒப்பந்தம் குறித்த தகவலைச் சிங்கப்பூர் நில ஆணையமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டன.
சிங்கப்பூர், Tyersall பார்க்கில் உள்ள நிலப்பகுதி 1800 ஆம் ஆண்டு முதல் ஜோகூர் அரச குடும்பத்திற்குச் சொந்தமானதாக இருந்து வருகிறது. ஜோகூர் சுல்தானின் வரலாற்றுபூர்வமான சிங்கப்பூர் இல்லமாக அது விளங்குகிறது.