கோலாலம்பூர், ஜூன்.11-
எஸ்ஆர்சி இண்டர்நெஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் 27 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட சட்டவிரோதப் பண மாற்றத்தில் ஈடுபட்டதாக தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டைக் கைவிடக் கோரி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சமர்ப்பித்த பிரதிநிதித்துவ மனுவை, சட்டத்துறை அலுவலகம் நிராகரித்தது.
தனக்கு எதிரான வழக்கை அந்த முன்னாள் பிரதமர் நீதிமன்றத்தில் எதிர்கொண்டே தீர வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்துள்ளதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அஷ்ரோவ் அசின் கமருல், கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி K. முனியாண்டியிடம் இன்று தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளை முற்றாகக் கைவிட வேண்டும் என்று 71 வயது நஜீப், சட்டத்துறை தலைவரிடம் பிரதிநிதித்துவ மனு ஒன்றை வழங்கியிருந்தார்.
எனினும் நஜீப்பின் அந்த விண்ணப்பத்தைச் சட்டத்துறை தலைவர் நிரகாரித்து விட்டதால், இவ்வழக்கு திட்டமிட்டப்படி நடைபெற வேண்டும் என்று துணைப் பப்ளிக் பிராசிகியூட்டர், உயர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.