கெரிக், ஜூன்.12-
பேராக் கெரிக் முதல் கிளந்தான் ஜெலி வரையிலான கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலைக்கான மேம்பாடுகள், நடப்பு மதிப்பீடு அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகளின்படி, அதன் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்ஸண்டர் நந்தா லிங்கி அறிவித்துள்ளார்.
கிழக்கையும், மேற்கையும் இணைக்கும் அந்த நெடுஞ்சாலை தொடர்பான மதிப்பீடு, இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கி கடந்த மாதம் நிறைவடைந்ததாக அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்ஸண்டர் குறிப்பிட்டார்.
Multi Laser Profiler, Falling Weight Deflectometer, Dynamic Cone Penetrometer மற்றும் Trial Pit methods முதலிய அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அலெக்ஸண்டர் தெரிவித்தார்.
இந்த நெடுஞ்சாலையின் தரத்தை உயர்த்தும் நோக்கி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் கெரிக் பகுதியில் கடந்த திங்கட்கிழமை உப்சி பல்லைக்கழகத்தை சேர்ந்த 15 மாணவர்கள் பேருந்து விபத்தில் உயிரிழந்தது தொடர்பில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு இன்று நேரடியாக வருகை புரிந்து, பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அலெக்ஸண்டர் இதனைக் குறிப்பிட்டார்.
சம்பவம் நடந்த இடத்தில் சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகளும் நிறுவப்படும் என்றும், அவற்றின் நிர்மாணிப்புப் பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டள்ளதாக அவர் கூறினார்.
15 மாணவர்கள் கொல்லப்பட்ட இந்தத் துயரச் சம்பவம் தம்மை வேதனையில் ஆழ்த்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.