தாயும், மகனும் வெட்டிக் கொலை: 17 வயது மகன் கைது

மலாக்கா, ஜூன்.12-

மலாக்கா, புக்கிட் ரம்பாய், தாமான் ரம்பாய் முத்தியாராவில் உள்ள தங்கள் வீட்டில் ஒரு ஆசிரியையான 51 மாதுவும், அவரின் 21 வயது மகனும் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த மாதுவின் 17 வயது மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்று காலையில் நிகழ்ந்த இந்தத் தாக்குதல் தொடர்பில் அந்த மாதுவின் இரண்டாவது மகனான எஸ்பிஎம் தேர்வு எழுதவிருக்கும் ஐந்தாம் படிவ மாணவனைப் போலீசார் கைது செய்துள்ளதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் அந்த மாணவன், 13 வயதுடைய தனது இன்னொரு சகோதரனைக் கத்தியால் கடுமையாகத் தாக்கியுள்ளான். எனினும் அந்த இளைஞர் வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட மாது, சீனப்பள்ளி ஒன்றின் ஆசிரியர் ஆவார். தனது தாயாரும், சகோதரனும் தன்னை படிக்கும்படி சதா நெருக்குதல் அளித்து வந்த காரணத்தினால் குடும்ப உறுப்பினர்களை அந்த மாணவன் தாக்கியதாக பூர்வாங்க விாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ ஸுல்கைரி தெரிவித்தார்.

மாதுவும், அவரின் மகனும் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டனர். இந்த தாக்குதலுக்கு அந்த மாணவன் பயன்படுத்தியதாக நம்பப்படும் 20 செண்டிமீட்டர் நீளமுள்ள ஒரு கத்தியைப் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS