கோலாலம்பூர், ஜூன்.12-
பேருந்து விபத்தில் உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை இழிவுப்படுத்தி கருத்து வெளியிட்டு இருக்கும் ஆசிரியர் ஒருவருக்கு எதிராக கல்வி அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமட் ஃபுவாட் ஸர்காஷி கேட்டுக் கொண்டார்.
பண்பு நலனையும், மனித நேயத்தையும் விதைக்க வேண்டிய ஆசிரியர்கள், மற்றவர்களின் துயரத்தைச் சீர்தூக்கிப் பார்க்காமல், வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளை வெளியிடுவதை கல்வி அமைச்சு வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது. அந்த ஆசிரியருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஃபுவாட் ஸைகாஷி குறிப்பிட்டார்.
உயிரிழந்த மாணவர்கள், பிடிபிடிஎன்னிடம் இருந்து பெற்ற கல்விக் கடனை அடைக்காதவர்கள் என்று அந்த ஆசிரியர் சினமூட்டும் கருத்தை வெளியிட்டதற்காக அவருக்கு எதிராக பலத்த கண்டனக் கணைகள் எழுந்து வருகின்றன.