ஈப்போ, ஜூன்.19-
ஈப்போவில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலையில் உலுக்கியதாகக் கூறப்படும் அதிர்வு குறித்து போலீசார் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.
இந்த அதிர்வுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிவதற்கு அரசாங்க மற்றும் தனியார் துறையைச் சார்ந்த நிபுணத்துவக் குழுவுடன் இணைந்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கல்லுடைப்பு நடத்துநர்கள், பூவியியல் நிபுணர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரான ராணுவம், பொது நடவடிக்கைப் பிரிவு ஆகியவை இந்த விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஈப்போ மக்களுக்கு பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து விரிவான ஆய்வுக்குப் பின்னர் விடை காணப்படும் என்று டத்தோ நூர் ஹிசாம் தெரிவித்தார்.