70 கிலோ கஞ்சாவைக் கடத்திய இருவர் கைது

கெப்போங்,

போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு ‘கடத்தி’களாகச் செயல்பட்ட இரண்டு பேர், கடந்த செவ்வாய்க்கிழமை கெப்போங், ஜாலான் பைடுரியில் நடந்த சோதனையில் 2 இலட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டனர். புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையும் பெர்லிஸ் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து நடத்திய இந்தச் சோதனையில், பெரோடுவா ஆருஸ் காரில் வந்த 33 முதல் 38 வயதுடைய இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா பொட்டலங்கள் சுமார் 73.25 கிலோகிராம் எடை கொண்டவை என்றும், அண்டை நாட்டில் இருந்து பெர்லிஸ் எல்லை வழியாக கிளந்தான் பள்ளத்தாக்குப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டவை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இடைக்காலத் தலைவர் டெபுடி கமிஷனர் மாட் ஸானி@முகமட் சலாஹூடின் சே அலி தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு 2 இலட்சத்து 27 ஆயிரத்து 63 ரிங்கிட் என்றும், அது 1 இலட்சத்து 46 ஆயிரத்து 492 பயனர்களுக்குப் போதுமானது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS