ஜோகூர் பாரு, ஜூன்.21-
இன்று நண்பகலில் ஜோகூர் பாரு, தாமான் மேகா ரியா பகுதியில் உள்ள 1,000 சதுர மீட்டர் பரப்பளவிலான ஒரு தொழில் வளாகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் மூன்று தொழிற்சாலைகள் முழுமையாகவும், இரண்டு தொழிற்சாலைகள் பகுதியளவும் அழிந்தன. குறைந்தது 13 வாகனங்கள் தீயில் கருகின. இந்தச் சம்பவம் குறித்து நண்பகல் 12:54 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாக தீயணைப்பு மூத்த செயல்பாட்டுத் தளபதி ரோஸ்ஃபாராவாடி இஸ்மாயில் தெரிவித்தார்.
எண்ணெய் சேமிப்பு, மறுசுழற்சிப் பொருட்கள், இரசாயனங்கள் போன்றவற்றை வைத்திருந்த இடங்களிலேயே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.