குவாந்தான், ஜூன்.25-
தனக்கு வாழ்க்கைத் துணையாக வரப் போவதாக ஆடவர் ஒருவரின் நம்பகத்தன்மை வார்த்தையை நம்பி, மாது ஒருவர் தனது வாழ்நாள் சேமிப்பான இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட்டை இழந்ததாக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாது லவ் ஸ்கேம் மோசடியில் சிக்கி, தனது சேமிப்புப் பணத்தை இழந்து இருப்பதாக மலேசிய அனைத்துலக மனித நேய அமைப்பின் தலைமைச் செயலாளர் டத்தோ ஹிஷாமுடின் ஹாஷிம் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆடவரின் ரசிக்கத்தக்க வார்த்தைகளை நம்பிய அந்த மாது, அவர் கேட்ட உதவிக்குப் பணத்தைத் தந்தது மூலம் மோசம் போனதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று டத்தோ ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.
முகாம் அமைப்பதற்கானச் சாதனங்களை வாங்குவதற்குத் தனக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த ஆடவர் கூறியுள்ளார். தனக்கு வாழ்வு கொடுக்க முன்வந்த அந்த நெஞ்சத்திற்கு உதவிட வேண்டும் என்ற நோக்கில் அந்தப் பெண், தனது வாழ்நாள் சேமிப்புப் பணத்தை வழங்கிய நிலையில், இறுதியில் அவரைத் தொடர்பு கொள்ள முடியாத துர்ப்பார்க்கியத்திற்கு ஆளாகியுள்ளார் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.