அந்தோணி லோக் வழங்கிய மானியத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம்

சிரம்பான், ஜூன்.27-

தனது சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 தமிழ்ப்பள்ளிகளுக்கு போக்குவரத்து அமைச்சரான அந்தோணி லோக் வழங்கிய மானியத்தை பள்ளிச் சீரமைப்பு, தளவாடங்கள் மற்றும் ஐசிடி பொருட்களை வாங்குவதற்கு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம் என்று பள்ளி பெற்றோர், ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதித் தெரிவித்துள்ளனர்.

இன்று சிரம்பான் லோபாக் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட 6 தமிழ்ப்பள்ளிகளுக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் ரிங்கிட் மானியத்தை அதன் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக்கிடமிருந்து பெற்றுக் கொண்ட அவர்கள், இந்த மானியத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தனர்.

லெங்கேங் தோட்ட தமிழ்ப்பள்ளி சார்பில் 33 ஆயிரத்து 460 ரிங்கிட் மானியத்தை, பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் K. உதயகுமரன் பெற்றுக் கொண்டார்.

இவ்வேளையில் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக், நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார் மற்றும் முன்னாள் தலைமையாசிரியர் சரவணன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக உதயகுமரன் தெரிவித்தார்.

லோபாக் தமிழ்ப்பள்ளி சார்பில் 86 ஆயிரத்து 280 ரிங்கிட் மானியத்தைப் பெற்றுக் கொண்ட அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சத்தியசீலன் திருமலைசாமி கூறுகையில், இந்த நிதியை மாணவர்களின் வளர்ச்சிக்கும், பள்ளிக் கட்டட சீரமைப்புக்கும் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டார்.

பாஜம் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி சார்பில் 69 ஆயிரத்து 467 ரிங்கிட் மானியத்தைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருடன் இணைந்து பெற்றுக் கொண்ட பள்ளி தலைமையாசிரியர் ரவிகுமார் கூறுகையில், இந்த நிதியின் மூலம் பள்ளியின் ஐசிடி அறையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.

நீலாய் தமிழ்ப்பள்ளி சார்பில் 66 ஆயிரத்து 415 ரிங்கிட் மானியத்தைப் பெற்றுக் கொண்ட பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் தவசீலன் கூறுகையில் பள்ளியில் ஐசிடி மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றார்.

இந்த மானியம் வாங்கும் நிகழ்வில் நீலாய் சட்டமன்ற உறுப்பினர் J. அருள்குமார், லோபாக் சட்டமன்ற உறுப்பினர் சியூ சே யோங் மற்றும் 6 பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுச் சிறப்பித்தனர்.

WATCH OUR LATEST NEWS