ஷா ஆலாம், ஜூன்.27-
சிலாங்கூரில் உள்ள ஏழு அணைகளிலும் நீர் மட்டம் 95 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது. இது இன்னும் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை மட்டுமே தாக்குப் பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாநில உள்கட்டமைப்பு மற்றும் விவசாயக் குழு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஸாம் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழைக் காரணமாக வெப்ப மற்றும் வறண்ட வானிலை நிலவி வந்தாலும், வரும் மாதங்களில் அணை நீர் மட்டம் நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
கடந்த மே 10 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் தென்மேற்கு பருவமழை, பொதுவாக பெரும்பாலான பகுதிகளில் குறைந்த ஈரப்பதத்தையும் குறைந்த மழைப்பொழிவையும் கொண்டு வரும் என்று டத்தோ இஸாம் ஹாஷிம் கூறினார்.
இருப்பினும், அக்டோபரில் பருவமழை மாற்றக் காலத்திலும், நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்யும் அதே வேளையில் நவம்பர் முதல் மார்ச் வரையிலான வடகிழக்கு பருவமழையின் போதும் அணைகளில் நீர் மட்டம் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் டத்தோ இஸாம் இதனைத் தெரிவித்துள்ளார்.