கோலாலம்பூர், ஜூன்.27-
அண்மையில் கோலாலம்பூரில் செராஸ் மற்றும் பிரிக்பீல்ட்ஸ் ஆகிய இரு பகுதிகளில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்குத் தீர்வு காண்பதற்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறையுடன் கோலாலம்பூர் போலீசார் அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாக அதன் துணைத் தலைவர் டத்தோ முகமட் உசோஃப் ஜான் முகமட் தெரிவித்தார்.
இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் புலன் விசாரணைக்கு ஏதுவாக தொடர்ச்சியாக சில ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கோலாலம்பூர் போலீசாருக்கும், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கும் இடையில் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதுவரையில் எந்தவொரு சந்தேகப் பேர்வழியும் கைது செய்யப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.