கோலாலம்பூர், ஜூன்.27-
சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் படுகொலை தொடர்பில் இரண்டு பெண்களுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டுள்ள ஆடவன், அந்தப் பல்கலைக்கழக மாணவியுடன் தங்கியிருந்த ஒரு பெண்ணின் காதலன் என்பது அம்பலமாகியுள்ளது.
இந்தப் படுகொலையை அவன்தான் செய்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அந்தப் பல்கலைக்கழக மாணவியுடன் தங்கியிருந்த இதரப் பெண்களில் ஒரு பெண்ணின் காதலன்தான் இந்தப் படுபாதகத்தைப் புரிந்து விட்டு, ஜோகூருக்குத் தப்பிச் சென்றுள்ளான்.
அவன் இன்று அதிகாலை 2 மணியளவில் ஜோகூர் பாருவில் பிடிபட்டான். அந்த ஆடவன் உட்பட தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த மூன்று பேரும், படுகொலை செய்யப்பட்ட மனிஷாபிரிட் கவுருக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
19 க்கும் 20 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகிய மூவரும் புலன் விசாரணைக்கு ஏதுவாக வரும் ஜுலை மாதம் 3 ஆம் தேதி வரை 7 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு சிப்பாங் மாவட்ட போலீசார், இன்று நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர்.