சிட்னி, ஜூன்.29-
ஆஸ்திரேலியா, சிட்னியில் நடந்த ஒரு போராட்டத்தின் போது காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில், மலேசிய முன்னாள் அரசு வழக்கறிஞர் டான் ஶ்ரீ தோமி தோமஸின் மகள் ஹான்னா தோமஸ் தனது வலது கண் பார்வையை இழக்க நேரிடும் என அஞ்சப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை பெல்மோரில் கைது செய்யப்பட்ட போது அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
இஸ்ரேலுக்குப் பயன்படுத்தப்படும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுக்கானச் சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டக்காரர்கள் நடத்திய இந்தப் போராட்டம், காவல் துறையினரால் கலைக்கப்பட்டது. ஹான்னா தோமஸ், காவல் துறையின் உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படுகிறது.
35 வயதான ஹான்னா தோமஸ் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலது கண்ணைச் சுற்றி கடுமையான வீக்கம் உள்ள நிலையில், அவருக்கு நிரந்தர வடு ஏற்படும் என அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர்.