அலோர் ஸ்டார், ஜூன்.29-
10 விழுக்காடு இலாபத்திற்கு ஆசைப்பட்டு, இரண்டே முக்கால் இலட்சம் ரிங்கிட்டை இழந்துள்ளார் கெடாவைச் சேர்ந்த 57 வயது பொறியாளர் ஒருவர். அண்மையில், முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்ட அந்நியச் செலாவணி முதலீட்டு மோசடியில் சிக்கிய அவர் குறுகிய காலத்தில் அதிக இலாபம் தருவதாக உறுதியளிக்கப்பட்ட சீன நாணய முதலீட்டில் அவர் ஈர்க்கப்பட்டு பணத்தைப் பறி கொடுத்தார்.
மோசடிக்காரர்கள் ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் அவரைச் சேர்த்து, எட்டு பரிவர்த்தனைகளில் அந்தத் தொகையை இரண்டு வெவ்வேறு நிறுவனக் கணக்குகளுக்கு மாற்ற வைத்துள்ளனர். ஆனால், உறுதியளித்தபடி எந்த இலாபமும் கிடைக்காததுடன், முதலீட்டுத் தொகையைத் திரும்பப் பெற மேலும் பணம் செலுத்தும்படி கோரப்பட்டுள்ளார்.
மோசடியை உணர்ந்ததும், பாதிக்கப்பட்டவர் பாலிங் மாவட்ட காவல் தலைமையகத்தில் புகார் அளித்ததாக கெடா மாநிலக் காவல் துறையின் வணிகக் குற்றப்புலனாய்வு பிரிவின் தலைவர் சுப்ரிண்டெண்டன் லோய் யியூ லிக் தெரிவித்தார். அடையாளம் தெரியாத நபர்களுக்குப் பணத்தை மாற்றுவதைத் தவிர்க்குமாறும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளுக்கு முன் சரி பார்க்குமாறும் காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.