கோல திரங்கானு, ஜூலை.02-
கடந்த சனிக்கிழமை இரவு திரெங்கானு, பூலாவ் பெர்ஹெந்தியான் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து மூவர் உயிரிழந்த சம்பவத்திற்குக் காரணமானவர் என்று கூறப்படும் படகோட்டிக்கு போலீசாரின் தடுப்புக் காவல் மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது போதைப்பொருள் உட்கொண்டு இருந்ததாகக் கூறப்படும் 22 வயதுடைய அந்த படகோட்டிக்கான தடுப்புக் காவல் நாளை வியாழக்கிழமை வரை நீட்டிக்க பெசுட் மாவட்ட மாஜிஸ்திரேட் நுர்லியானா முகமட் ஸுக்ரி அனுமதி அளித்தார்.
1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் படகோட்டி தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
இரவு 10.30 மணிக்கு நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தில் பினாங்கைச் சேர்ந்த 40 வயது S. ஆறுமுகம், அவரன் 3 வயது மகள் ஏ. சர்விகா மற்றும் அவர்களின் உறவுக்காரப் பிள்ளையான 10 வயது வி. வெண்பனி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களின் ஒருவரின் உடல் நிலை மிகக் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.