பாங்கோக், ஜூலை.02-
தாய்லாந்தின் துணைப்பிரதமரும், உள்துறை அமைச்சருமான Phumtham Wechayachai அந்நாட்டின் காபந்து பிரதமராக நியமிக்கப்படவிருக்கிறார்.
நாளை வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு காபந்து பிரதமராக Phumtham Wechayachai பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்வார் என்று அந்நாட்டின் இரண்டாவது துணைப்பிரதமர் Suriya Juangroongruangkit உறுதிப்படுத்தினார்.
தாய்லாந்து பிரதமராகப் பொறுப்பு வகித்து வந்த 38 வயது Paetongtarn ஷினவத்ராவை அந்நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம், நேற்று இடை நீக்கம் செய்தது.
அண்மையில், கம்போடியாவின் முன்னாள் தலைவர் Hun Sen -னிடம் ஷினவத்ரா தொலைப்பேசியில் பேசியிருந்தார். அந்தத் தொலைபேசி உரையாடல் சமூக ஊடகத்தில் கசிந்து பெரும் சர்ச்சையாக மாறியது.
அந்த 17 நிமிடங்கள் தொலைபேசி உரையாடலில் தாய்லாந்து ராணுவத் தளபதியை தன் எதிரி என ஷினவத்ரா குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஷினவத்ரா பதவி விலகக் கோரி தாய்லாந்தில் ஆர்ப்பாட்டம் வெடித்தது.