ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா

சிரம்பான், ஜூலை.04-

சிரம்பான், சுங்கை காடுட், தாமான் துவாங்கு ஜாஃபாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆதி பெரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா, வரும் ஜுலை 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகுச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இதனையொட்டி ஜுலை 5 ஆம் தேதி சனிக்கிழமை கற்பூரத் திருவிழா மற்றும் ஜுலை 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உற்சவத் திருவிழாவுடன் பஞ்சமூர்த்திகள் இரத புறப்பாடு நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழாவையொட்டி நேற்று முன்தினம் புதன்கிழமை தேவஸ்தானத்தில் நடேஸ்வரர் உற்சவம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

காலையில் நடராஜா பெருமானுக்கும், ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் பெருமானுக்கும் விஷேச அபிஷேகங்கள் நடைபெற்றன. மாலையில் வசந்த மண்டப பூஜைக்கு பின்னர் சுவாமிகள் உள் வீதி மற்றும் வெளி வீதி வலம் வந்தனர்.

மலேசியாவில் முதல் முறையாக 63 நாயன்மார்கள் மற்றும் நடராஜ பெருமான் – சிவகாமி அம்மையார் இரதத்தில் வெளி வீதி வலம் பக்தர்களுக்கு அருள் காட்சி தந்தனர். உடன் பக்தர்களும் பன்னிசை திருமுறை பாராயணம் நடைபெற்று கோஷங்கள் எழுப்பிய வண்ணம் பக்திப் பரவசத்துடன் சென்றது உற்சவத்திற்கு முத்தாய்ப்பாக அமைந்தது.


தேவஸ்தானத்தின் மஹோற்சவப் பூஜைகள் அனைத்தும் திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ சுந்தரப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் தலைமையில் அவரின் ஆலோசனைப்படி நடைபெற்று வருகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த மஹோற்சவப் பெருவிழாவில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் அருளாசியைப் பெறுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS