தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நெகிரி செம்பிலான பிரதிநிதிகள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது

சிரம்பான், ஜூலை.07-

தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலங்களுக்கான மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பிரதிநிதிகள் மாநாடுகளில், நெகிரி செம்பிலான் மாநில மாநாடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை சிரம்பான் அரேனா ஸ்குவர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த மாநாட்டை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ G. சங்கரன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான எஸ். வீரப்பன், J. அருள்குமார் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் P. குணசேகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சிறந்த அடைவு நிலையைப் பெற்று, உயர்க்கல்வி வாய்ப்பைப் பெற்றுள்ள அங்கத்தினர்களின் 11 பிள்ளைகளுக்குச் சங்கத்தின் பிபிஎன் கல்வி அறவாரியத்திலிருந்து நிதி உதவி வழங்கப்பட்டது.

அதே வேளையில் சிறந்த சேவையாளர்கள் ஐவர், மாலை அணிவிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தப்பட்டு சிறப்புச் செய்யப்பட்டு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

மாநாட்டில் உரையாற்றியை ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன், தமிழ்ப்பள்ளிகளுக்கு மேலும் நிதி உதவி வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தமது உரையில் குறிப்பிட்டார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் தமது உரையில், நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு வீடமைப்புக்குத் தாம் பொறுப்பேற்று இருப்பதால் பகாவ், லாபு, போர்ட்டிக்சனில் கட்டடப்பட்டு வரும் மலிவு விலை வீடமைப்புத் திட்டங்களில் தோட்டத் தொழிலாளர்ககள் பங்கேற்று, அந்த வீடுகளை வாங்குவதற்கு முனைப்பு காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவசியம் ஏற்படும் பட்சத்தில் தாம் உதவத் தயாராக இருப்பதாக அருள்குமார் குறிப்பிட்டார்.

சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தமது உரையில் இன்று தோட்டத் தொழில் நவீனமயப்படுத்தப்பட்டு, வீடு, குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகள் பெற்று இருப்பதால் வேலையின்றி இருக்கும் இளைஞர்கள் தோட்டத் தொழிலுக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றியை சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ G. சங்கரன், தொழிற்சங்கத்தைப் பொறுத்தவரையில் எல்லா தரப்பினருடன் இணைந்து செயலாற்ற முனைப்பு காட்டி வருகிறது என்றார்.

குறிப்பிட்ட அரசியல் கட்சி என்ற நிலையில்லாமல் அனைவரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவக்கூடிய தரப்பினருடன் சங்கம் ஒத்துழைப்பு கொண்டு வருகிறது.

அதே போன்று சங்கத்துடன் இணைந்து பணியாற்றும் அரச சாரா இயக்கங்களுக்கும் சங்கம் இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ சங்கரன் குறிப்பிட்டார்.

விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு தோட்டங்களின் கால் ஏக்கர் நிலங்களைப் பெற்று, அதில் அன்றாடத் தேவைக்கான காய்கறிகளைப் பயிரிட்டு, தங்கள் பொருளாதாரச் சிரமங்களைக் குறைக்க தோட்டத் தொழிலாளர்கள் முனைப்புக் காட்ட வேண்டும் என்று டத்தோ சங்கரன் தமது உரையில் கேட்டுக் கொண்டார்.

சங்கத்தின் நெகிரி செம்பிலான் செயலாளர் P. சாந்தகுமார் மற்றும் தலைவர் ரோஹி சந்துரு மேற்பார்வையில் நடைபெற்ற மாநாட்டில் மாநில அரசு இலாகாக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS