சுங்கை பூலோ, ஜூலை.07-
சுங்கை பூலோ எம்.ஆர்.டி. ரயில் நிலையத்தில் கத்திரிகோலைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியதாக நம்பப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட நபரைப் போலீசார் கைது செய்தனர்.
நேற்று பின்னிரவு ரயில் நிலையத்தின் உதவி போலீஸ்காரர்கள் மூலம் அந்த நபர் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹாஃபிஸ் முகமட் நோர் தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக இரவு 11.15 மணியளவில் ஒரு பெண்ணிடமிருந்து ஓர் அவசர அழைப்பைப் போலீசார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
மனநலம் பாதிக்கப்பட்டவரான தனது தந்தை, கத்திரிகோலை எடுத்துக் கொண்டு, ஒரு நபரைத் துரத்திக் கொண்டு எம்.ஆர்.டி. நிலையத்தை நோக்கி ஓடுகிறார் என்று அந்த பெண் புகார் அளித்து இருந்ததாக முகமட் ஹாஃபிஸ் தெரிவித்தார்.
அந்த நபரை வரும் ஜுலை 9 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.