அலோர் ஸ்டார், ஜூலை.09-
சிறார்களை இலக்காகக் கொண்டு, சங்கிலித் தொடரைப் போன்று பாலியல் வன்கொடுமைகளைப் புரிந்து வந்ததாக நம்பப்படும் பாகிஸ்தான் ஆடவர், கெடா, கோல நெராங்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயதுடைய அந்த காமுகனுக்கு எதிராகப் பல்வேறு போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த நபர், தீவிரமாகத் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் அந்த நபர், அண்டை நாட்டிற்குத் தப்பிச் செல்ல முயற்சித்த வேளையில் அவர் பாதுகாப்புப் படையினரால் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளார் என்று ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அந்த நபர், நாட்டை விட்டுத் தப்பித்துச் செல்லும் முயற்சியில் அவருக்கு உதவியாக இருந்ததாக நம்பப்படும் மற்றொரு பாகிஸ்தான் ஆடவரையும் போலீசார் கைது செய்து இருப்பதாக ஏசிபி முகமட் இக்பால் குறிப்பிட்டார்.
அந்த நபர் சம்பந்தப்பட்ட, ஷா ஆலாமில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பில் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி முகமட் இக்பால் தெரிவித்தார்.
வயது குறைந்தப் பிள்ளைகளைத் தனிமையில் விட வேண்டாம் என்று அவர் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.