ஷா ஆலாம், ஜூலை.09-
ஷா ஆலாம் வட்டாரத்தில் இரண்டு முன்னணி உணவகங்களிலும், ஒரு முடித் திருத்தும் நிலையத்திலும் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சட்டவிரோத அந்நியக் குடியேறிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல், இதர உணவகங்களுக்கும் சட்டவிரோதக் குடியேறிகளை வேலைக்கு அனுப்புதல் முதலிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் அந்த இரு உணவகங்களுக்கு எதிராக கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து இன்று மதியம் இந்தச் சோதனை முடுக்கி விடப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் கைருல் அமினுஸ் கமாருடின் தெரிவித்தார்.
இரண்டு உணவகங்கள் மற்றும் ஒரு முடித் திருத்தும் நிலையத்தில் நடத்தப்பட்டச் சோதனையில் 23 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய 24 அந்நிய நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் எந்தவோர் அடையாள ஆவணமும் இல்லை என்பது சோதனையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.