பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 2023-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் மேலும் கூடுதலாக 4 வகையான ஊக்குவிப்பு சலுகைகளை இன்று அறிவித்துள்ளார்.
வரும் நோன்புப்பெருநாளை முன்னிட்டு வழங்கப்படும் நிதி உதவி, தனிநபருக்கான வருமானவரி விலக்களிப்பு சலுகை நீட்டிப்பு மற்றும் வீட்டு கடன் உத்தரவாத நிறுவனமான எஸ்.ஜே.கே.பி. வாயிலாக வீட்டு கடன் நிதி ஒதுக்கீடு ஆகியவை அவற்றில் அடங்கும்.
இதில் ரப்பர் சிறுத் தோட்டக்கார்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் என 8 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மேலும் கூடுதலாக தலா 200 வெள்ளி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று நிதி அமைச்சருமான அன்வார் அறிவித்தார்.
தவிர, ரேலா தன்னார்வ உறுப்பினர்கள், பொது தற்காப்பு படையினர், தொண்டூழிய போலீஸ்காரர்கள் மற்றும் தீயணைப்பு படையினருக்குப் பெருநாள் ஊக்கத் தொகையாக தலா 300 வெள்ளி வழங்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.