இந்தியர்களின் சமூகவியல், பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ராவிற்கு 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள 10 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டை, பிரதமர் துறையின் கீழ் உள்ள மித்ரா நிர்வாகம், இந்தியர்களின் மேம்பாட்டிற்கு எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்பது குறித்து, நாடாளுமன்றத்தில் வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது.
ஈப்போ பாராட் எம்.பி. எம். குலசேகரன் தலைமையில் இந்திய சமுதாயத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மித்ராவின் நிர்வாக இயக்குநர் ரவீந்திரன் நாயரிடம் விளக்கம் கோர விருக்கிறனர். இந்த விளக்கம் அளிப்புக்கூட்டத்திற்கு அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ முகமட் ஜூகி அலி அனுமதி அளித்துள்ளார்.
இதன் தொடர்பில் வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு விளக்கம் அளிக்குமாறு மித்ரா தலைமை இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக குலசேகரன் தெரிவித்தார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட இந்த பத்து கோடி வெள்ளி நிதியை, இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு மித்ரா என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு செலவிடப்பட வேண்டும்? அது எவ்வாறு வழிநடத்தப்பட வேண்டும் போன்ற விவகாரங்களை மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயருடன் எம்.பி.க்கள் விவாதிக்கவிருப்பதாக குலசேகரன் குறிப்பிட்டார்.