கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரையில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட அதிக குற்றச்செயல்களில் லோவ் ஸ்கேம் எனப்படும் இணைய காதல் மோசடிகள் முன்னணியில் இருப்பதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கூறுகிறது.
இணையத்தின் வாயிலாக தொடர்பு கொண்டு, வசீகர வார்த்தைகளினால் காதல் மொழிபேசி, இதயங்களை வருடும் இந்த நூதன லோவ் ஸ்கேம் மோசடிகளினால் 36 கோடியே 50 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின் இடைக்கால போலீஸ் துணை இயக்குநர் முகமது யூசுப் ஜான் முகமட் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட 7,286 லோவ் ஸ்கேம் மோசடி தொடர்பான குற்றச்செயல்களில் ஏமாந்து பணம் இழந்தவர்களில் 82.5 விழுக்காட்டினர் பெண்கள் ஆவார்.
குறிப்பாக, தனித்து வாழும் தாய்மார்கள், தனிமையில் உள்ள பெண்கள், கணவனை இழந்த வசதி படைத்த மூதாட்டிகள், திருமணம் ஆகாத வயது முதிர்ந்த பெண்கள் ஆகியோரை இலக்காக கொண்டு, அன்புக்காக ஏங்கும் அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி, மோசடி கும்பல்களால் இந்த வசீகர காதல் வலை, கனகச்சிதமாக பின்னப்பட்டு, ஆன்லைன் மூலம் பணம் பறிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்று முகமட் யூசுப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.