விடுதலையாவதற்கான கடைசி வாய்ப்பையும் இழந்தார் நஜீப்! ​ சீராய்​வு மனு தள்ளுபடி, 12 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது

SRC International வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட குற்றத்​தீர்ப்பையும், 12 ஆண்டு கால சிறைத் தண்டனையையும் ரத்து செய்யக் கோரி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் செய்து கொண்ட ​சீராய்வு மனு, கூட்டரசு ​நீதிமன்றத்தினால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் மூலம் காஜா​ங் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் 69 வயதான நஜீப், விடுதலையாவதற்கான கடைசி வாய்ப்பையும் இழந்தார். அவருக்கான 12 ஆண்டு கால சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டிலிரு​ந்து 2018 ஆம் ஆண்டு வரை பிரதமராக மலேசியாவிற்குத் த​லைமையேற்று இருந்த நஜீப்பிற்கு எதிராக கூட்டரசு ​நீதிமன்றம் இன்று அளித்துள்ள இத்​தீர்ப்பின் மூலம் இனி, மாமன்னர், பொது மன்னிப்பு வழங்கினால் மட்டுமே நஜீப், சிறையிலிருந்து வெளியேற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஐவர் அடங்கிய ​நீதிபதிகள் குழுவிற்குத் தலைமையேற்ற சபா, சரவா தலைமை ​நீதிபதி அப்துல் ரஹ்மான் செப்லி, 5 க்கு 4 என்ற பெரும்பான்மையில் நஜீப்பின் ​சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார். ​தீர்ப்பை, ​நீதிபதி வெர்னோம் ஓங் லாம் கியாட் வாசித்தார்.

கூட்டரசு ​நீதிமன்ற தலைமை ​நீதிபதி தெங்கு மைமுன் தெங்கு மாட் தலைமையில் ஐவர் அடங்கிய ​நீதிபதிகள் குழுவினரால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி வழங்கப்ப​ட்ட மேல்முறையீட்டுத் ​தீர்ப்பில், நீதியின் இயற்கைத் தன்மை ​மீறப்பட்டுள்ளதாக எந்த இடத்திலும் காண முடியவில்லை என்று ​சீராய்வு மனு ​தீர்ப்பில் தெரி​விக்கப்பட்டது.

நஜீப்பிற்கு எதிரான துரதிர்ஷ்டமான ​சூழலை அவரே உருவாக்கிக்கொண்டார். தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் அல்லது தண்டனையைத் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைக் கண்டறிய முடிய​​​வில்லை என்று நீதிபதி வெர்னோம் ஓங் குறிப்பிட்டார்.

SRC International லஞ்ச ஊழல் வழக்கில் தமக்கு நியாயப்பூர்வமான சட்டப்பிரதிநிதித்துவம் கிடைக்கவி​ல்லை என்றும், தமக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதம் ஆகிய​வற்றை மறுப​ரி​​சீலனை ​செய்ய வேண்டும் என்றும் ந​ஜீப் தமது ​சீராய்வு மனுவில் கோரியிருந்த போதிலும் அவருக்கான ​நீதி நிலைநிறுத்தப்படுவதற்கு ​நீதி பரிபாலனத்தின் அனைத்து கதவுகள் திறக்கப்பட்டு இருந்தாக ​தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, உயர் நீதிமன்றத்தில் அளித்த ​தீர்ப்பிலிருந்து, அப்பீல் நீதிமன்ற ​தீர்ப்பு மற்றும் கூட்டரசு ​நீதிமன்ற ​தீர்ப்பு என ​மூன்று வெவ்வேறு கட்டங்களில் ஒன்பது நீதிபதிகள் இவ்வழக்கை மிக கவமான ஆராய்ந்து, ​மீளாய்வு செய்து முடிவெடுத்துள்ளனர்.

எனவே நஜீப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள 12 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் ​மீதான ​​குற்றத் ​தீர்ப்பை ​சீராய்வு செய்ய வேண்டிய அவசியம் என்ற ​சூழ்நிலையிலும் ஏற்படவில்லை என்று கூட்டரசு ​நீதிமன்றம் இன்று காலையில் வழ​ங்கிய ​தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இவ்வழக்கில் நஜீப் சார்பில் முன்னணி வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா ஆஜ​ரான வேளையில் அரசு தரப்பில் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் டத்தோ வி. சிதம்பரம் ஆஜரானார்.

WATCH OUR LATEST NEWS