SRC International வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட குற்றத்தீர்ப்பையும், 12 ஆண்டு கால சிறைத் தண்டனையையும் ரத்து செய்யக் கோரி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் செய்து கொண்ட சீராய்வு மனு, கூட்டரசு நீதிமன்றத்தினால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் மூலம் காஜாங் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் 69 வயதான நஜீப், விடுதலையாவதற்கான கடைசி வாய்ப்பையும் இழந்தார். அவருக்கான 12 ஆண்டு கால சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை பிரதமராக மலேசியாவிற்குத் தலைமையேற்று இருந்த நஜீப்பிற்கு எதிராக கூட்டரசு நீதிமன்றம் இன்று அளித்துள்ள இத்தீர்ப்பின் மூலம் இனி, மாமன்னர், பொது மன்னிப்பு வழங்கினால் மட்டுமே நஜீப், சிறையிலிருந்து வெளியேற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்குத் தலைமையேற்ற சபா, சரவா தலைமை நீதிபதி அப்துல் ரஹ்மான் செப்லி, 5 க்கு 4 என்ற பெரும்பான்மையில் நஜீப்பின் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார். தீர்ப்பை, நீதிபதி வெர்னோம் ஓங் லாம் கியாட் வாசித்தார்.
கூட்டரசு நீதிமன்ற தலைமை நீதிபதி தெங்கு மைமுன் தெங்கு மாட் தலைமையில் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினரால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி வழங்கப்பட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பில், நீதியின் இயற்கைத் தன்மை மீறப்பட்டுள்ளதாக எந்த இடத்திலும் காண முடியவில்லை என்று சீராய்வு மனு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
நஜீப்பிற்கு எதிரான துரதிர்ஷ்டமான சூழலை அவரே உருவாக்கிக்கொண்டார். தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் அல்லது தண்டனையைத் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைக் கண்டறிய முடியவில்லை என்று நீதிபதி வெர்னோம் ஓங் குறிப்பிட்டார்.
SRC International லஞ்ச ஊழல் வழக்கில் தமக்கு நியாயப்பூர்வமான சட்டப்பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்றும், தமக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதம் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நஜீப் தமது சீராய்வு மனுவில் கோரியிருந்த போதிலும் அவருக்கான நீதி நிலைநிறுத்தப்படுவதற்கு நீதி பரிபாலனத்தின் அனைத்து கதவுகள் திறக்கப்பட்டு இருந்தாக தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, உயர் நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பிலிருந்து, அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு மற்றும் கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பு என மூன்று வெவ்வேறு கட்டங்களில் ஒன்பது நீதிபதிகள் இவ்வழக்கை மிக கவமான ஆராய்ந்து, மீளாய்வு செய்து முடிவெடுத்துள்ளனர்.
எனவே நஜீப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள 12 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் மீதான குற்றத் தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டிய அவசியம் என்ற சூழ்நிலையிலும் ஏற்படவில்லை என்று கூட்டரசு நீதிமன்றம் இன்று காலையில் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் நஜீப் சார்பில் முன்னணி வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா ஆஜரான வேளையில் அரசு தரப்பில் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் டத்தோ வி. சிதம்பரம் ஆஜரானார்.