ஜொகூர் பாரு, மே 18-
மலேசியாவில் Jemaah Islamia தீவிரவாதக் கும்பல், ஒடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. J.I.( ஜே.ஐ.) என்று சுருங்க அழைக்கப்படும் Jemaah Islamia தீவிரவாதக் கும்பல், 20 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் ஒடுக்கப்பட்டுள்ள போதிலும் அதன் கிளை வேர்களின் சித்தாந்தம், இன்னமும் ஆணி வேரைப் போன்று மிக ஆழமாக வேரூன்றியிருப்பதை ஜோகூர், உலு திராம் போலீஸ் நிலையத்தில் அந்த கும்பல் நடத்திய தாக்குதல் சம்பவம் நிரூபிப்பதாக உள்ளது என்று தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் முஹம்மது மிஸான் அஸ்லாம் கூறுகிறார்.
அந்த தீவிரவாதக் கும்பல் ஒரு சிறிய அளவில் இன்னமும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை உலு திராம் போலீஸ் நிலைய தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட J.I. கும்பலைச் சேர்ந்தவன் என்று நம்பப்படும் 22 வயது ஆடவரின் தந்தை உட்பட குடும்ப உறுப்பினர்கள் ஐவர் கைது செய்யப்பட்டு இருப்பதை நிரூபிக்கிறது.
தவிர, அந்த இளைஞரின் தந்தை J.I. கும்பலைச் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மிஸான் அஸ்லாம் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சித்தாந்தங்களை கொண்டுள்ள தீவிரவாதிகளையும், பயங்கரவாதிகளையும் சிறையில் அடைக்க முடியும். ஆனால், அவர்கள் விதைத்து விட்ட பயங்கரவாத சித்தாந்த வேர்கள், எந்த இடத்திலும், எங்கும் வேரூன்றியிருக்கலாம்.
எனவே J.I. கும்பலின் நடவடிக்கைகள் துளிர் விடுவதை போலீசார் அணுக்கமாக கண்காணிக்க வேண்டும் என்பதுடன் அதன் வேர், முழுமையாக களையெடுக்கப்பட வேண்டும் என்று மிஸான் அஸ்லாம் கேட்டுக்கொண்டார்.