ALLAH சொல் கொண்ட காலுறைகளை விற்பனை செய்ததற்காக, சிலாங்கூர், சன்வே யிலுள்ள KK MART தரப்பு மன்னிப்புக் கோரியிருந்தாலும் அக்கடைகளைத் தொடர்ந்து புறக்கணிக்குமாறு அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் முகமாட் அக்மால் சாலெ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட விவகாரத்தில், டாக்டர் அக்மால் சாலெ வும் வலைத்தளவாசிகளும் இனம் மற்றும் சமய உணர்வுகளை தூண்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என DAP-க்கான நாடாளுமன்ற தலைவர் ஙகா கோர் மிங் நேற்று கூறியிருந்தார்.
குறிப்பாக, அம்னோ இளைஞர் பிரிவு தலைவரின் அச்செயல் அம்னோவிற்கே பாதக விளைவுகளை வழங்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், பேஸ்புக்கில் இன்று வெளியிட்டிருந்த பதிவில் டாக்டர் அக்மால் சாலெ அவரது அக்கூற்றுக்கு பதிலடியை வழங்கியுள்ளார்.
தனது செயல் நிந்தனையானது என ங்கா கோர் மிங் கூறுவதைக் கண்டு தாம் நடுங்கவில்லை. இஸ்லாம், பூமிபுத்ரா, மலாய் ஆட்சியாளர்கள் உள்ளிட்ட விவகாரங்களை தற்காக்கும் கொள்கையிலிருந்து அம்னோ ஒருபோதும் விலகாது என்றாரவர்.
இஸ்லாத்தை அவமதிக்கும் அனைத்து தரப்பினருக்கும் ஒரு பாடமாக அமைய, KK MART-ட்டை புறக்கணிக்கும் போக்கை தொடரும்படி, தனது ஆதரவாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, சர்ச்சைக்குரிய காலுறைகளை விற்பனை செய்திருந்த KK MART வணிகத் தலத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என உள்துறை துணையமைச்சர்டத்துக் ஶ்ரீ டாக்டர் ஷாம்சுல் அனுவார் னாசாரா நேற்று கூறியிருந்தார்.