மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் குறித்து அவதூறு மற்றும் அவமதிப்பான பதிவுகளை வெளியிட்ட போலி டிக்டாக் கணக்கிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜோகூர் அரண்மனை அலுவலகம், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.
“சுல்தான் இப்ராஹிம் இஸ்மாயில்” என்ற பெயரில் செயல்படும் அந்த போலி டிக்டாக் கணக்கில், மாமன்னரின் புகைப்படங்களுடன் அவர் “பன்றி இறைச்சி சாப்பிட விரும்புகிறார்” என பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்குற்றச்சாட்டானது மாமன்னரைத் திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட மிகக் கடுமையான, உணர்வுகளைத் தூண்டக் கூடிய செயல் என அரண்மனை அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், மாமன்னர், மலேசியாவில் மலாய் ஆட்சியாளரும் இஸ்லாமிய சமயத்தின் தலைவருமாக செயல்பட்டு வரும் நிலையில், இத்தகைய பதிவுகள் மிகுந்த பொறுப்பின்மையுடனும் தீய நோக்கத்துடனும் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








