பினாங்கு, செபராங் பிறை உத்தாரா பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளர் போல நடித்து தங்க நகையைத் திருடிக்கொண்டு நபர் ஒருவர் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
அந்தக் காணொலியில், கடைக்குள் நுழைந்த நபர் இரு பெண் ஊழியர்களிடம் நகையைக் காட்டுமாறு கேட்டுள்ளார். ஊழியர் ஒருவர் கண்ணாடிப் பெட்டியிலிருந்து நகையை எடுத்துக் கொடுத்ததும், அதனைப் பார்ப்பது போல நடித்த அந்த நபர், கண் இமைக்கும் நேரத்தில் நகையுடன் கடையை விட்டு வெளியே ஓடியுள்ளார்.
இச்சம்பவத்தால் அந்த நகைக்கடைக்கு சுமார் 3,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் சி. தர்மலிங்கம், இத்திருட்டு வழக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.








