பெட்ரோல் நிலையத்தில் ‘ஃபிளீட் கார்டு’ வசதியைப் பயன்படுத்தி மானிய விலையில் டீசல் வாங்கி, அதனை முறைகேடாகக் கடத்த முயன்ற லாரி ஒன்றைச் சிலாங்கூர் உள்நாட்டு வாணிபம் மற்றும் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு பறிமுதல் செய்துள்ளது.
நேற்று மதியம் ஜாலான் பத்து தீகா லாமா பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் டீசல் நிரப்பிக்கொண்டிருந்த அந்த லாரியை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, லாரியின் பின்புறத்தில் 2,000 லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்த ‘ஐபிசி’ கொள்கலன்கள் கண்டறியப்பட்டன. மேலும், லாரியின் பதிவு எண்களுக்குப் பொருந்தாத மாற்று ‘ஃபிளீட் கார்டுகள்’ பயன்படுத்தப்பட்டதும் விசாரணையில் அம்பலமானது என்று அமைச்சின் சிலாங்கூர் மாநில அமலாக்கப்பிரிவு தலைமை அதிகாரி முகமது ஹனிசாம் கெச்செக் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, முறையான ஆவணங்களின்றி டீசல் கடத்தலில் ஈடுபட்ட 45 வயதுடைய மலேசிய ஓட்டுநரும் அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரி மற்றும் டீசலின் ஒட்டுமொத்த மதிப்பு 1 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1961 கட்டுப்பாட்டுப் பொருட்கள் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தற்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.














